Tuesday, April 2, 2019

மாதத்திற்கு இரண்டு கிலோ எடை குறைய வேண்டுமா? மதிய உணவாக பார்லி உண்ணுங்கள்

பார்லி வெஜிடபிள் ரைஸ்
தேவையானவை: பழுப்பு நிற பார்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடமிளகாய், கேரட் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறிகள், பட்டை, இலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய்.
செய்முறை: பார்லியை புலவு செய்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் கழுவி, ஊறவைக்கவும். பிறகு, ஒரு பங்கு பார்லிக்கு 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் சேர்த்து, சாதம் வடிப்பது போலவே பார்லி சாதம் வடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, பார்லியைச் சேர்த்து, நன்கு வெந்ததும், கஞ்சியை வடித்துவிடவேண்டும். பொதுவாகவே, சாதம் வடிக்கும்போது, கஞ்சியை வடித்துவிட்டால், அதிலிருக்கும் ‘ஸ்டார்ச்’ போய்விட்டாலே, உடலுக்கு நல்லதுதான். ஊளைச்சதை குறையும். வடித்த பார்லி சாதத்தை, ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆறவிடவும். காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். 
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பிறகு, நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, துளி உப்பு சேர்த்து, ஒரு வதக்கு வதக்கவும். அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். காரம் அதிகம் தேவைப்பட்டால், கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். முக்கால்வாசிப் பதம் வெந்தபிறகு, ஏற்கெனவே வேகவைத்த பார்லியை எடுத்துப் போட்டுக்கிளறி, அடுப்பை ஸிம்மில் வைத்து, மூடிவைத்து, ‘தம்’ கட்டலாம். இதனால், நிதானமாக தண்ணீர் வற்றி, காய்கறிகளின் சுவை பார்லியில் இறங்கி, அதிக ருசியாக இருக்கும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறிவிடலாம். இது மதிய உணவுக்கு நல்ல சாய்ஸ்.  
குறிப்பு: 
* வெள்ளை பார்லியை உபயோகிப்பதென்றால் அதை ஊறவைக்கத் தேவையில்லை. அப்படியே கழுவி விட்டு உபயோகிக்கலாம். 
* பார்லி சாதம் வடித்த கஞ்சியில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, வீட்டில் இருக்கும் முதியோர் அல்லது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நல்ல உடல் பலத்தைக் கொடுக்கும்.
* பார்லியை வெறும் வெள்ளை சாதமாக வடித்து, நாம் தினமும் செய்யும் காய்கறி, குழம்போடும் சாப்பிடலாம். 

பயன்கள்:
* இந்த பார்லி வெஜிடபிள் புலவை தினசரி மதிய உணவாகச் சாப்பிட்டு வந்தால், மாசத்துக்குக் குறைந்தபட்ச, தலா 2 கிலோ குறையும். பார்லியின் மருத்துவ குணம் என்னவென்றால், கொழுப்பைச் சுரண்டி எடுத்தல் (கரைத்தல்) மற்றும் கொழுப்பை வளர விடாமல் குறைத்தல். இது போன்ற குணங்களை உடைய பார்லியைச் சாப்பிடுவதால், நிச்சயமாக உடலில் இருக்கும் ஊளைச்சதை குறையும். 
* பல பெண்களுக்குக் காலையில் போடும் பிளவுஸ் சரியாக இருப்பதாகவும் மாலையில் இறுக்கமாகி விடுவதாகவும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாலையில் உடல் ஊதும். இப்படி வந்தால், தேவையில்லாத கெட்ட நீர் உடலில் சேர்கின்றது என்று அர்த்தம். இது போல கெட்ட நீர் சேர்பவர்களுக்கு, தினமும் மதியம் பார்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வர, மாலையில் உடலில் கெட்ட நீர் சேராது. 
* அரிசி சாதத்தை விட, பார்லி சாதம் ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ கொண்டது. ரத்தத்தில் சீக்கிரமாக சர்க்கரையை வெளிவிடாது. 

No comments:

Post a Comment